பாகம் 1
"தற்கொலை செய்து கொள்வது எப்படி?"
எகிப்து நாட்டின் அழகு தேவதை கிளியோபாத்ரா,தன் காதலன் ஆண்டனியின் இறப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும்,எதிரியின் கையால் சாக விரும்பாமலும் நச்சுப் பாம்பை தன் மார்பில் கடிக்க வைத்து மாண்டுபோனாள்.
மேலனேசியாவில் தென்னை மரத்தின் மேல் ஏறிக்குதித்து உயிர் விடும் பழக்கம் இருந்து வந்தது.
வடகலிபோர்னியாவின் ஒரு பகுதியில் வாழும் விண்டு(wintu) என்ற இன மக்கள் ஆழமான நீர் நிலைக்குச் சென்று குதிப்பர்.உயிர்போகும் வரை கரைக்கு வருவதும் மீண்டும் தண்ணீரில் குதித்து இறப்பதும் அம் மக்களின் பழக்கம்.
ஹவாய்த் தீவில் தலைவனோ,தளபதியோ இறந்த பின் அவனுடைய ஊழியர்களும் உடன் தற்கொலை செய்து கொள்வது வழக்கம்.
சப்பானில் அடிவயிற்றில் தன் வாளால் குத்தி, தானே குடலை எடுத்து மரணம் எய்தும் "ஹரகிரி" என்ற வழக்கம் இருந்து வந்தது.
சமயவெறி பிடித்த சப்பானியர்கள் கடல் பயணம் மேற்கொள்ளும்போது கப்பலின் மேல் மட்டத்திலிருந்து,பலரும் பார்க்கும் வண்ணம் கடலில் குதித்து உயிர் விடுவர்.அவர்களை யாரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள்.மாறாக அவர்கள் கடலில் குதிக்கும் முன் காண்போர் வணங்கி ஆசிகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வார்கள்.
காதலில் தோல்வியுற்ற காதலர்கள் ஒருவரையொருவர் கயிற்றினால் பிணைத்துக்கொண்டு மிகுந்த ஆழம் உள்ள நீர் நிலைகளில் குதித்து உயிர் விடும் "சிஞ்சு"(shinju) என்ற தற்கொலைப் பழக்கம் சப்பானியர்களிடம் இருந்து வந்தது.
தென் அமெரிக்க மயன் மக்கள் தற்கொலைக்கு என்றே "எல்ஸ்டாவ்"(lxtav) என்னும் பெண் தெய்வத்தைக் கொண்டிருந்தனர்.அப்பெண் தெய்வத்தின் தோற்றம் ஆகாயத்தில் இருந்து தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குவது போல இருக்கும்.
ஸ்பெயின் நாட்டுப் பழங்குடியினர் இறப்பை வரவேற்கிறார்கள்.கிழப்பருவம் வரை அவர்கள் காத்திருப்பதில்லை.தற்கொலை செய்து கொள்வதை கொண்டாடுவார்கள்.
கணவனைக் கொன்ற வேலைத் தன் மார்பில் பாய்ச்சி இறக்கும் மனைவியின் தற்கொலையை ஆஞ்சிக்காஞ்சி என்கிறார், தொல்காப்பியர்.
ஆண் குரங்கை இழந்த,தாய்க் குரங்கு தன் குட்டிக் குரங்கை உறவினக் குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு மலை உச்சியில் ஏறிக் கீழே பாய்ந்து இறந்து விடுவதை குறுந்தொகைப் பாடல் ஒன்று பதிவு செய்திருக்கிறது.
அன்றில் பறவைகளில், துணைப் பறவை இறந்து விட்டால்,இணைப் பறவையும் உடன் இறந்து விடும்.ஆண் இறந்தால் பெண் இறந்து விடும்;பெண் இறந்தால் ஆண் இறந்து விடும்.மூன்று முறை உரத்துக் கூவி அழைக்கும்,இணைப் பறவை மாற்றுக் குரல் கொடுக்க இயலாது மடிந்து கிடக்குமானால்; மற்றதும் உயிரை விட்டு விடும்.உரத்த குரலில் கதறிக் கதறி அழுதே உயிரை விட்டுவிடும் என்று நற்றிணையும்,அகநானூறும்,கலித்தொகையும்,குறுந்தொகையும் கூறுகிறது.
ஒருவன் தன்னைத் அரிந்து ஒன்பது கூறுகளாக்கி,அவற்றில் ஒன்றினைத் தெய்வத்திற்குப் படைக்கும் நவகண்டம் கொடுத்தல் பற்றி கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிக்கப் பட்டிருக்கின்றன.
இடைக்காலத் தமிழகத்தில் கோயில் கோபுரத்திலிருந்து தற்கொலை செய்யும் பழக்கம் மிகுதியாக இருந்து வந்திருக்கிறது.
திருவரங்க கோயிற் பூசைகள் முறையாக நிகழவில்லை என்பதைக் கண்டித்து,அழகிய மணவாளதாசன் எனும் அறங்காவலர்,கோயில் கோபுரத்தில் ஏறிக்குதித்து உயிர் துறந்தார்.இந் நிகழ்வின் பின்,கோயில் வழிபாட்டு முறை சரி செய்யப் பட்டது.அக்கோபுரத்தில்,அவருக்குச் சிலையும் அமைக்கப் பட்டது.
மதுரை விசயரங்க சொக்கநாதன் ஆண்டான் அறுபத்து நான்கு பேர்,சொக்கநாதர் கோயிற் பணியாளர்.அவர்கட்கு மான்யமாக வழங்கப் பட்டு பல ஊர்களில் இருந்த நிலங்கட்கு தாளமுடியாத வரி அரசால் போடப் பட்டது.அதை எதிர்த்த ஒருவன் கோபுர உச்சியில் ஏறிக் குதித்து உயிர் நீத்தான்.உடன் வரி நீக்கப்பட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டில் (கி.பி.1792) அய்ரோப்பியப் படையினர்,மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலை அழித்தனர்.திருப்பரங்குன்றம் பழநி ஆண்டவர் கோயிலையும் அழிக்க முனைந்தனர்.அதை எதிர்த்து "குட்டி" என்பவர் கோபுர உச்சியில் ஏறிக் குதித்து உயிர் விட்டார்.இந்நிகழ்வைக் கண்டு அதிர்ந்த அய்ரோப்பியப் படை அவ்வூரை விட்டு அகன்றது.
இச்செய்தியை மதுரை திருப்பரங்குன்றக் கொயில் கல்வெட்டு உணர்ச்சி ததும்ப தெரிவிக்கிறது.
கி.பி. 1628 இல் மதுரை நாயக்கர் மன்னன் மடிந்தபோது,அவனது 700 மனைவியரும் உடன் தீக்குளித்தனர்.கி.பி. 1659 இல் புகழ்பெற்ற திருமலை நாயக்கர்,இறந்தபோது அவருடன் அவனுடைய 200 மனைவியரும் தீக்குளித்து இறந்தனர்.
தமிழ் கவிஞர்களிடையே ஒர் அவநம்பிக்கை உணர்வு இழையோடுவதை அறிஞர்கள் கண்டிருக்கலாம்.குறிப்பாச் சொன்னால் பக்தி இலக்கியங்களில் வாழத் துடித்தலை விட சாகத் துடித்தல் மூலம் இறைவனின் திருவடிகளை எய்தலாம் என்பது போன்ற நிறைய அவலங்கள் கொட்டிக் கிடக்கும்.
இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது,இந்திராவின் இறப்பைத் தாளாமல் 4 தமிழர்கள் தீக்குளித்தனர்.3 பேர் தூக்கிட்டுக் கொண்டனர்.ஒருவர் நஞ்சுண்டார்.7 பேர் நெஞ்சு அதிர்ந்து இறந்தனர்.இவர் அனைவரும் தமிழர்கள்.ஒரிசாவிலுள்ள கட்டாக்கில் ஒருவர் தீக் குளித்தார்.அவரும் தமிழரே.மலேசியாவில் தேநீர் கடைக்காரர் தூக்கிட்டுக் கொண்டார்.அவரும் தமிழரே.
எம்.ஜி.ஆர் காலமான செய்தியைக் கேட்டு 26 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டார்கள்.
இராசீவ் காந்தி கொல்லப் பட்டதை அறிந்து தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 6 .
தமிழ்நாட்டில் தற்கொலைக்கு என்றே பெயர் பெற்ற தனி ஊர் ஒன்று உள்ளது.வேலூருக்கு அருகே "முள்அண்டிரம்" என்ற ஊர்.மாதம் சராசரி 15 முதல் 20 பேர் இவ்வூரில் தற்கொலை செய்து கொள்கின்றனராம்.
வெப்ப மண்டலத்தில் வாழும் மக்களிடையே தற்கொலை மிகுதி,குளிர் மண்டல வாழ் மக்களிடையே தற்கொலை குறைவாகவும் நிகழ்கிறது என்கிறது,ஓர் ஆய்வு!
கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே மிகுதியாகத் தற்கொலை நிகழும் நாடு இலங்கை எனப் பதிவாகியுள்ளது.நாள்தோறும் 27 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது, சிங்கப்பூர் தமிழ்முரசு.
காருக்குள் ,கார்ப்புகையை நிரப்பி தற்கொலை செய்து கொள்ளும் பழக்கம் ஆஸ்திரேலியர்களிடம் இருந்த வந்தது.அதனால் கார்புகையைக் கட்டுப்படுத்தி,புகை காரினுள் வரமுடியாதபடி கருவிகளைத் தயாரிக்கக் கார் உற்பத்தியாளர்கள் முயன்று வருகிறார்கள்.
இறந்த கணவனை எரிக்கும் தீக்குள் பாய்ந்து இறந்த யாரோ ஒரு பெண்ணிற்காக தோன்றிய தீப்பாய்ந்தாள் கோயில்களே ,இன்று திரெளபதியம்மன் கோயில்களாக மாறின என்று ஓர் ஆய்வேடு கூறுகிறது.
தாங்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த இடம் முழுவதும் மாசடைந்த சமயத்தில்,இனிமேலும் அங்கு வசிப்பது இயலாது என்ற நிலையில்,தங்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது அரிது என்று அறிந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீரில் மூழ்கி ஜலசமாதி செய்து கொண்ட சம்பவங்கள் ஏராளம்.
_ஆதிசிவம்,சென்னை.
உங்களோடு இந்த பதிவை பார்வையிட்டவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com