வியாழன், ஜனவரி 29

முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்!

நம் இமெயில் குழுவில் இருந்த, முத்துகுமரனின் கடைசி இமெயில் வந்த நேரம் காலை 7.40


இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் இன்று தீக்குளித்து மரணமடைந்த நம் அருமைச் சகோதரன் முத்துக்குமாரின் மரண வாக்குமூலம் இது.






_ஆதிசிவம்





தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!

தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை...






அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே...






வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும். தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன். வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?






ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?






ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா? ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?






கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல. காகிதம் எதையும் சாதிக்காது மக்களே! இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார். தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ''தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா"னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே...






பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே... உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.






ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது. அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம். உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்! விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக்க்கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!, ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.






இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள். உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும். ‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?






தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?






தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே...






உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம். ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.






தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே...






உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழுத்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது. டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள். ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது. ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா... இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த


இந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும். ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.






களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப்புலிகளே...






அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த்தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே... ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.






அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைகுரிய ஒபாமாவே,






உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம். உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று... நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா? வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா? இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை? ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.






புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)






இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொண்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது. அப்படியானால், பாகிஸ்தானின் இந்திய மீதான பயங்கரவாதமென்பது இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.






இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை. இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை. உதாரணம் ரணில்- கருணா. ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா. ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்... வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல... இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்-நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்... எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள். தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.






காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.






1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.






2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.






3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.






4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.






5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.






6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.






7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.






8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்






9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.






10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.






11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.






12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.






13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.






14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.






என்றும் அன்புடன்,






அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,


கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99






அருமைத்திமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.







தமிழ் ஓவியா சொன்னது :
முத்துக் குமாரின் உணர்வை மதிக்கிறேன். அதே வெளை இது போன்ற குறிப்பாக தீக்குளிப்பு போன்ற போராடங்கள் தேவையில்லாதது. அருள்கூர்ந்து யோசித்து மாற்றுப் போரட்ட வடிவத்தை கையிலெடுங்கள்.







இது குறித்து தி.க.தலைவர். கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள செய்தி இதோ:






“அந்தோ! கொடுமை! கொடுமை!! ஈழத் தமிழர் பிரச்சினை:


சென்னையில் இளைஞர் தீக்குளித்து மரணம்






தற்கொலைப் போராட்டத்தைக் கைவிட்டு


அறப்போர்பற்றி சிந்தியுங்கள்!


தமிழர் தலைவர் கி. வீரமணி அன்பு வேண்டுகோள்






ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க வேண்டி மாணவர்கள் உண்ணாவிரதம் போன்ற அறப்போர்களில் ஈடுபட்டதைத் தாண்டி, இன்று சென்னை சாஸ்திரி பவன் முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் தனக்குத்தானே தீக்குளித்து இறந்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வேதனைக்குரியது; ஆழ்ந்த துன்பத்தைத் தருவது.


இந்தியப் பேரரசு இதுபோன்ற கொடுமைகள் நடக்காவண்ணம் மேலும் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்த முன்வாருங்கள்.






ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க இங்குள்ள நாம் உயிர்த் தியாகம் செய்வது என்பதனால் முழுப் பயன் அடைந்து விட முடியாது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடிட உயிருடன் இருப்பது அவசியமாகும்.






எனவே, மாணவத் தோழர்களே, இளைஞர்களே அருள்கூர்ந்து இம்மாதிரி தற்கொலைப் போராட்ட முயற்சியைக் கைவிட்டு, வேறு ஆக்க ரீதியான அறப்போர்கள் பற்றி சிந்தியுங்கள் என்று அன்புடனும், உரிமையுடன் மாணவத் தோழர்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.


———நன்றி “விடுதலை” 29-1-2009

நன்றி

http://thamizhoviya.blogspot.com/


 
 
சாகின்றாய்.. தமிழா சாகின்றாய்....


உன்னை சாகச் செய்வானை சாகச் செய்யாமல்


சாகின்றாய்...!


தமிழா சாகின்றாய்....


சனி, ஜனவரி 24

மனித சாதி...!-கவிதை.















மனித சாதி...!-கவிதை.

எங்கள் ஊரில்...

மரங்களுக்கும் கூட
தாலி கட்டிப் பார்த்தார்கள்...

கழுதைகள்
தவளைகளுக்கும் கூட
கல்யாணம்
செய்து
அழகு பார்த்தார்கள்...!

ஒரு நாள்...

எதிர்த்த வீட்டு அக்காவும்
எங்க தெரு அண்ணனும்
ஊரை விட்டே
ஓடிப் போனார்கள்...

மனிதர்களாகப் பிறந்த அவமானத்தால்...

எந்த சாமியும்
வாய்
திறக்கப் போவதில்லை...!
நிரம்பி வழியும்
பாவ உண்டியல்
வாய்
திறந்து சொன்னது...!


www.beyouths.co.cc







செவ்வாய், ஜனவரி 20

"கள்ள வோட்டு"-கவிதை

"கள்ள வோட்டு"-கவிதை








கள்ள வோட்டுப்  போட

வாங்கிய பணம்

என்னிடமே

திரும்பி வந்தது...

கள்ள "நோட்டாம்...!"





         www.beyouths.co.cc

ஞாயிறு, ஜனவரி 18

ஓ... பக்கங்கள்!






(வலை உலக மேதாவிகள் பெரும்பாலும்,காலையில் எழுந்து தூங்கப் போகும் வரை நடந்த நிகழ்வுகளையே தங்களின் சொந்த வலைத் தளங்களில் எழுதி நம்மையெல்லாம் தினம்,தினம் சாகடித்துக் கொண்டு வருகிறார்கள்.அந்த பதிவுகளை, படிப்பவர்கள் என்ன பயனடைந்து விடுவார்கள் என்று யோசிப்பதில்லை அல்லது யாரும் இங்கே யோசிக்கத் தயாராக இல்லை.இதோ நானும் அப்படிப்பட்ட ஒரு விபரீத முயற்சியில்
களம் இறங்கியிருக்கிறேன். பிறவிப் பயனடையுங்கள்!)



சென்னை.

2009 பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு தினம்.


என் தூக்கம் கலைந்த போது, காலை பத்து மணிக்கு மேலாகியிருந்தது.மின்வெட்டால் மின்விசிறி எப்போழுதோ நின்று போயிருந்தது.


வாழ்க மின்சாரத் துறை!


செய்தித் தாள் வாங்க வேண்டும்.எல்லா தினசரிகளும் இப்படி சிறப்புத் தினங்களில் விற்றுத் தீர்ந்து விடும்.தமிழர்கள் வீட்டு டிவியோடு ஹேப்பி பொங்கல் கொண்டாட போய் விட்டதால்,கடைகள் மூடிக் கிடந்தன.


மார்வாடி,அடகுக் கடைக்காரன் மட்டும் எல்லா இடங்களிலும் கடை திறந்து உட்கார்ந்திருந்தான்.எப்படியாவது ஒரு தமிழனாவது தன் பொண்டாட்டி தாலியை அடகு வைக்க இங்கு வராமலா போய் விடுவான்? என்ற நம்பிக்கையோடு.


எல்லா தமிழ் தினசரிகளும் விற்று விட்டன.ஆனால் தினகரன்,சில ஆங்கில பத்திரிக்கைகள் மட்டும் வியாபாரமாகாமல் இருப்பதாக,இரண்டு கடைகளிலும் ஒரே பதிலைக் கடைக்காரன் சொன்னான்.


தமிழ் தினசரிகளில் "தினகரன்" மலிவு விலை என்றாலும் வாங்க ஆளில்லை!


இதைத்தான் கலைஞரின் மாபெரும் குடும்பம்,தன் சொந்த பேப்பர் என்பதால்,தன் சொந்த "சூரியன் FM" வானொலியில் தமிழ் நாட்டின் நம்பர் ஒன் பேப்பர் "தினகரன்" என்கிற பச்சைப் பொய் விளம்பரத்தை தினமும் வாய் கூசாமல் அளந்து விட்டுக் கொண்டிருக்கிறது.


ஒரு வழியாக பேப்பர் கிடைத்ததும் வீடு திரும்பினேன்.


வீட்டிலிருந்த கைப்பேசியில் மிஸ்ட் கால் பட்டியலில் அம்மா பெயர் இருந்தது.


அழைத்தேன். "பொங்கல் தீபாவளிக்காவது வீட்டுக்கு வந்து தொலைடா சனியனே! "என்று செல்லமாக விட்ட அர்ச்சனையைக் கேட்க சுகமாக இருந்தது.


வருவதாகச் சொன்னேன்.

இந்த வெட்டி ஆபிசரின் இன்றைய நிகழ்ச்சி?

சென்னையில் வருடந்தோறும் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்குப் போவது என்பது தான்.


போகும் வழியில்,ஒரு ஆட்டோக் காரரிடம்,ஒரு "உயர்வருவாய்" ( வேற்றுக்கிரக? ) சுகவாசி ஒன்று,தன் காரின் பெயிண்ட் போனதுக்காக போக்குவரத்தையே நிறுத்தி,நரம்பு புடைக்க கத்திக் கொண்டிருந்தது.





இந்த வகை "உயர்சாதி" நாய்கள் பெரும்பாலும் உண்மையான வறுமை,விலை உயர்வு, நாட்டு நலன் பற்றி கொஞ்சம் கூட வாய் திறக்காது என்ற உண்மை என் முகத்தில் அறைய நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.


"சங்கமம்" என்ற கிராமக் கலை நிகழ்ச்சியை கலைஞர் பெற்ற கவிதை கனிமொழி சிறைச்சாலையில் நடத்திய நிகழ்ச்சியறிந்து என்ன ஒரு நகைச்சுவை உணர்வு அவருக்கு என்று வியந்து போனேன்!


கலைஞர் ஆட்சியில் நாடே திறந்த வெளி சிறைச்சாலையாக மாறி விட்ட பிறகு...


(சிறைக்கு)உள்ளே-வெளியே நாடகம் எதற்கு?


திருமங்கலம் இடைத் தேர்தலில் கலைஞர் கட்டுப்பாட்டில் இருக்கிற போலீசால் கட்டுப்படுத்த முடியாது என்று துணை ராணுவம் வாக்கு நடக்கும் இடத்தில் முகாம் இட்டச் சென்ற ஒற்றைச் செய்தியே ,அதைச் சொல்லும்!


"சோதிடம்" உன்னைத் தவிர எல்லாவற்றையும் நம்பு என்கிறது.

"தன்னம்பிக்கை"யோ உன் மேல் நம்பிக்கை வை,பிறகு மற்றவர்கள் உன் மேல் நம்பிக்கை வைப்பார்கள் என்கிறது.


இரண்டு எதிர் எதிர் தலைப்புகளில் இருக்கும் புத்தகங்கள் எப்படி சக்கை போடுகின்றன, என்னே தமிழனின் அறிவு என்றும் மெய் மறந்து நின்றேன்.


புத்தக அரங்கினுக்குள் நுழைந்தேன்...


"என் பிள்ளைக்கு தமிழே தெரியாது.அவனால எப்படி இந்த தமிழ் புத்தகத்தப் படிக்க முடியும்? அவன இங்கிலீஷ் மீடியத்தில சேத்திருக்கிறேன். செகண்ட் லாங்வேஜா ஹிந்தி எடுத்துப் படிக்கிறான்" என்று பெருமிதமாகச் சொன்ன,ஒரு தமிழ்த் தாயின் விபரீதப் பேச்சால், நான் தலை நிமிர்ந்தேன்!


"விடுதலைப் புலிகள்" என்ற புத்தகம் புத்தக அரங்கில் தடை செய்யப்பட்டிருக்கிறது.தேவையானால் பதிப்பக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கிழக்குப் பதிப்பகத்திலிருத்து பதில் வந்தது.


இதே கலைஞர் இயக்கத்தை தடை செய்தது(லாடம் கட்டியது)காங்கிரஸ்,அன்று!


அதே காங்கிரஸ் சொல்லி,தடை செய்திருக்கிறது கலைஞர் அரசு, விடுதலைப்புலிகளை,இன்று!


வாழ்க ஜனநாயகம்!


"பாரதியார் கவிதைகள் இங்கிலீஷ்ல கிடைக்குமா? என் மகளுக்கு தமிழே வராது.அதான் இங்கிலீஷ்ல கேக்கிறேன்" என்று ஒரு பொறுப்பான தமிழ் அப்பா கேட்டார்,தமிழில்...


"அப்படியெல்லாம் எங்கேயும் கிடைக்காது "என்று முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி அனுப்பி விட்டார்,கடைக்காரர்.


அம்மாவின் வீட்டுக்குள் நுழையும் போது இரவு ஒன்றுக்கு மேலாகியிருந்து,அம்மாவைத் தவிர எல்லோரும் தூங்கிப் போய் விட்டார்கள்.


வீட்டிலிருந்த நாய் இந்த இரவு நேரத்தில உனக்கு வாலாட்டி எல்லாம் வரவேற்க முடியாது, போடாப் போ! என்பதைப் போல கண்களைத் திறந்து பார்த்து விட்டு,தூக்கத்தைத் தொடர்ந்தது.


"ஊர் உலகத்தில எல்லா பிள்ளைகளும் போல தானே உன்னையும் பாக்க ஆசைப்பட்டேன்,அது தப்பா? நான் செத்தக் கூட நான் நிம்மதியில்லாமத் தான்டா சாவேன்,அதுக்கு நீதான் தான்டா காரணம்" என்று உண்மையாகவே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்,அம்மா.


கேட்டுக்கு கேட்டு சலித்துத்துப் போனதால்,நான் ஒன்றும் குறுக்கிட விரும்ப வில்லை.


இரவு என் அறைக்குத் திரும்பும் போது, இரண்டு மணிக்கு மேல் ஆகியிருந்து.


ஆரம்ப நாட்களில் தனியாக படுத்துக் கொள்ள,கொஞ்சம் வெறுமையாக இருந்தது, பழகப் பழக இப்பொழுதெல்லாம் அது ஒன்றும் பிரச்னையாகத் தெரியவில்லை.


மறுநாள் விடிந்ததும் வாந்தி வந்தது.


"வீட்டுச் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை" என்று பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தேன்.

(குறுங்கதை முற்றும்)








புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கி புத்தகங்கள்

1. மவுனப் பயணி
(பாரதிஜிப்ரானின் கவிதைத் தொகுப்பு,இது)


2.உலக சினிமா பாகம் 2
(செழியன் )


3.கனவைப் போலொரு மரணம்
-அ.வெண்ணிலா
(பரிசுப் பெற்ற கவிதை நூல்)


4.பெரியார் டைரி-2009


5.இயக்குநர்-நடிகர் சேரன்,கவிஞர் அறிவுமதி, தமிழர் தலைவர் கி.வீரமணி
(பெரியார் திடல் ஆடியோ CD),


6. ஓ...பக்கங்கள்..!
ஞாநி
(குமுதம்,ஆனந்தவிகடன் வார இதழ்களில் சமுதாய அவலங்களைச் சாடும் கட்டுரைகள்)
www.gnani.net


7.பாஸிடிவ் பாயிண்ட் 100





புதன், ஜனவரி 14

கோபுரக் காதல்-சிறுகதை


அப்பத்தா-சிறுகதை

-பாரதிகிருஷ்ணகுமார்,





அப்பத்தா படுத்தா, வைத்தியம் பாக்கக் கடவுள் தான் வரணும் என்று தாத்தா சொன்னது சரியாகி விடும் போலிருக்கிறது. மகன்கள்,மகள்கள்,பேரன் பேத்திகளும் பால் ஊற்றினால், அடங்குமென்று ஊற்றச் சொன்னார்கள்.




பலனில்லை.


ஆஸ்பத்திரிக்கு போக வேண்டாமென்று சுப்பையா டாக்டர் சொல்லி விட்டார்.


தலைமாட்டிலேயே இருந்த தாத்தாவுக்கு கண்ணெல்லாம் சிவந்து,இரண்டு கைகளையும் கூப்பியபடி "கஷ்டப்படாம போயிரணும்" என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டே இருந்தார்.




இந்தக் குடும்பத்துக்கு குத்தகை பார்க்கிற செவனம்மா, அப்பத்தாவை கட்டிலை விட்டு இறக்கி தரையில் போட்டால் ஆறு நாழிகைக்குள் அடங்கி விடும் என்றது.


செல்லூர் சித்தப்பாவுக்கு ஜோசியத்தில் நம்பிக்கை. ஜோசியன்,சாமியாடி திருநீறு கலந்த தண்ணீரை மூணு தரம் கொடுக்கச் சொன்னான்.


முட்டைக் கரண்டியில் மூணு கரண்டி நல்லெண்ணெய் கொடுத்தா அடங்கும் என்று யாரோ சொன்னார்கள்.அதுவும் நடந்தது.




விளக்கெண்ண,நல்லெண்ண,வேப்பண்ணெ மூணும் சேத்துக் குளிப்பாட்டுனா ஒரு முடிவு வரும் என்று ஒரு கிழவி சொன்னது.குளிப்பாட்டிய பிறகு அப்பத்தா முகத்து கூடுதல் பொலிவு வந்ததே தவிர, 'எதிர்பார்த்த', வேறு எதும் நடக்க வில்லை.




எது வேணும்னாலும் செய்யுங்க.கண்ண மூடுனா பரவாயில்ல;கஷ்டப்படக் கூடாது என்பது தான் தாத்தா திரும்பத் திரும்பச் சொன்னது.

தாத்தாவின் நினைவு பின்னோக்கிப் போனது...




புருஷனுக்குப் போட்டது போக, மிச்ச மீதி வழக்கம் எல்லாம் அப்பத்தாவுக்கு கிடையாது.அதற்கு நேர் எதிர்.அப்பத்தா சாப்பிட்ட பிறகுதான் தாத்தா சாப்பிடுவார்.இத்தனை வருஷத்தில்,ஒரு வேளை கூடக் கடையில் சாப்பிட்டதில்லை.








அப்பத்தா கண்ணசைத்த பிறகுதான் தாத்தா சாப்பிட உட்காருவர்."ரெண்டும் ரொம்பத்தான் பண்ணிக்குதுங்க" என்று அறிந்தும்,அறியாமலும் மற்றவர்கள் பேசுவதை தாத்தா கூட சமயங்களில் பொருட்படுத்துவார்.அப்பத்தா ஒப்புக் கொள்ளாது.


"கண்டதச் சாப்பிட்டு அரை நாளு அவுக முடியாமப் படுத்தா எவ வந்து பாப்பா" என்று உரக்கச் சொல்லி விடும்.


தாத்தா தலைவலி என்று படுத்தால் கூட ஊரையையே ஊமையாக்கி விடும் அப்பத்தா.




வீட்டுக் கோழிகளுக்கும்,விருந்தாட வரும் காக்கைகளுக்கும்,கொல்லையில் நிற்கும் காராம் பசுவுக்கும் கூடத் தெரியும், தாத்தா தூங்குகிறார் என்று. கொலுசு போட்டுக் கொண்டே சத்தம் வராமல் நடந்து போகிற வித்தை அப்பத்தா மட்டுமே அறிந்த நளினம்.




ஊறுகாய் ஜாடிக்குள் கை போட்டால் ஊசிப் போகும் என்பது மற்றவர்களுக்குத்தான்.அப்பத்தா எதையும் கையில்தான் எடுக்கும் எந்தப் பண்டமும் ஊசிப் போகாது.காலையில் அம்மியில் அரைத்த தேங்காய்ச் சட்னி,இரவு வரை மணம் மாறாமல் இருக்கும்.எல்லாம் அப்பத்தா கைப் பக்குவம்.


அந்தக் கைகள் குளிர்ந்து போய், வெளுத்துக் கிடந்தன.

கல்யாணமாகி, மூணாவது நாள் இந்த வீட்டுக்கு வந்த அப்பத்தா,திரும்ப ஒரு முறை கூட பொறந்த வீட்டுக்குப் போகவேயில்லை.தன்னைப் பொறந்த வீட்டுக்கு அனுப்பவே வேண்டாமென்று,அப்பத்தா கேட்டுக் கொண்டதை தாத்தா யாருக்கும் சொல்லவே இல்லை. அந்தக் கோபத்தின் பின்னே என்ன இருந்ததென்று யாருக்கும் தெரியாது.


கூடப் பொறந்தவங்க யாரும் கிடையாது,அப்பத்தா, ஒத்தப் பொறப்பு.


அப்பத்தாவுக்குப் பதினைந்து வயசாக இருக்கிற போதே, நெருங்கிய சொந்தமான கண்ணுச்சாமியைப் பேசி முடித்திருக்கிறார்கள்.கண்ணுச்சாமிக்கு படிப்பு முடிந்ததும் கல்யாணம் என்பது இரு வீட்டுச் சம்மதம்.கண்ணுச்சாமிக்கு அப்பத்தாவின் மீது தீராத,மாளாத,குறையாத காதல்!


நாலு வருஷத்துக்குள்,ஓஹோவென்றிருந்த கண்ணுச்சாமியின் குடும்பம்,பெரும் பள்ளத்தில் போய் விழுந்து விட்டது.அந்த ஒற்றைக் காரணத்துக்காகவே, அந்தச் சம்பந்தம் வேண்டாமென்று, தாத்தாவைப் பேசி முடித்தார்கள்.




கல்யாணத்துக்கு ஒரு வாரம் இருந்த போது,கண்ணுச்சாமியைக் காணோம் என்று ஊரே தேடியது.பழனிக்குப் பாத யாத்திரை போனதாகவும்,கல்யாணத்தன்று அதே முகூர்த்த நேரத்தில் மொட்டை போட்டுக் கொண்டார் என்பதும் தெரிந்த போது, எல்லாம் முடிந்து இரண்டு நாளாகி இருந்தது.இனி ஜன்மத்துக்கும் கல்யாணம் செய்யப் போவதில்லை என்று, ஊரறிய கண்ணுச்சாமி செய்த சத்தியம் அப்பத்தாவை அதிரச் செய்தது.


காசு பணத்துக்காக தாயும்,தகப்பனும் செய்த "படுகொலை" அப்பத்தாவின் ஈரக்குலையைக் கலக்கி விட்டது.. !

பொன்னைத் தேய்த்து ஊற்றச் சொன்னார்கள்.காசித் தண்ணீரைக் கொடுத்தார்கள்.முன்வாசல் மண்,புற வாசல் மண், வயக்காட்டு மண் என்று வித விதமாய் கரைத்து ஊற்றியும் அப்பத்தா அசைந்து கொடுக்க வில்லை.




அப்பத்தாவுக்கு வலிப்பு மாதிரி வந்து வெட்டி வெட்டி இழுத்தது. உடம்பு தூக்கித் தூக்கிப் போட்டது."இந்தக் கண்றாவியக் கண்ணால பாக்காம,நாம முதல்ல போயிரணும்" என்று தாத்தா கதறியதும் எல்லோரும் கலங்கிப் போனார்கள்.


விடியற்காலையில்,வீடு முழுக்கத் தேடியும் தாத்தாவைக் காணோம். கிணறு, குளம்,கம்மாய் என்று ஒரு இடம் விடாமல் தேடினார்கள்.அக்கம் பக்கத்து ஊர்களில் எல்லாம் இளவட்டங்கள் தேடினார்கள்.ஒரு நாள் முழுசாகக் கழிந்தது.




தாத்தா தட்டுப் படவேவில்லை!




தலையில் இருக்கும் துவாரங்கள் வழியாக உயிர் பிரிவது புண்ணியமென்றும்,இடுப்புக் கீழே உள்ள துவாரங்கள் வழி உயிர் பிரிவது பாவமென்றும் சொல்லிக் கொண்டிருந்தது,அத்தை.


தாத்தாவைத் தேடிப் போனவர்கள் எல்லாம் வெறுங்கையோடு திரும்பிக் கொண்டே இருந்தார்கள்.


மறுநாள் பொழுது சாய்ந்த பொழுது,யாரோ தாத்தா வருவதாகச் சொன்னார்கள்.வீடே ஓடி வந்து வாசலில் நின்றது.கூடவே வந்தவருக்கும் தாத்தா வயது தான் இருக்கும்.பிள்ளைகள் எல்லோரும் தாத்தாவைக் கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தார்கள்.தாத்தாவும் அழுது கொண்டே இருந்தார்.




குல்லூர் சந்தை விலக்கு ரோட்டில் தாத்தா நின்று கொண்டிருந்ததாகவும்,தற்செயலாகப் பார்த்துப் பேச்சுக் கொடுத்து, விவரம் தெரிந்து அழைத்து வந்ததாகவும் கூட வந்தவர் சொன்னார்.வந்தவர் சொல்லித் தான் தாத்தா அவ்வளவு தூரம் போனது தெரிந்தது.


வந்தவர் வாசலில் இருந்த எல்லோரிடமும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, அப்பத்தா இருந்த அறையில் படுத்துக்கிடந்த தாத்தாவுக்குப் பக்கத்திலேயே போய், அவரும் படுத்துக் கொண்டார்.


காலையில் முத பஸ்ஸுக்கு தான் போக வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.




முத பஸ்ஸுக்கு அரை மணி முன்னதாக,தாத்தாவே வந்தவரைத் தொட்டார்.அவரும் தாத்தாவைப் போலவே தூங்கவில்லை என்பது இருவரின் கண்களில் தெரிந்தது.அவரை, அப்பத்தாவுக்கு அருகில் தாத்தாவே அழைத்துப் போனார்.


இரண்டு கைகளையும் கூப்பியபடி வந்தவர் அப்பத்தாவைப் பார்த்தபடியே நின்றார்.குடிப்பதற்குத் தலை மாட்டில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து,அவர் கையில் கொடுத்து அப்பத்தாவுக்கு ஊற்றச் சொல்லி சைகை காட்டினார்.ஸ்பூனில் தண்ணீரை எடுத்து ஊற்றினார்.தண்ணீர் மணல் தரையில் மறைவது மாதிரி மறைந்தது.இரண்டாவது ஸ்பூன் தண்ணீர் ஊற்றியதும், "புளக்" என்கிற ஓசையுடன் தொண்டைக் குழியிலேயே மோதி தெறித்து வெளியேறியது.


வந்தவர் கொடுத்த தண்ணீர் அப்பாத்தாவின் கடைவாயில் இருந்து வழிந்து, சரிந்து வெளியேறிக் கொண்டிருந்தது...


வந்தவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்ட தாத்தா ,"என் செல்லமே!" என்று அப்பத்தாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுத குரல்,அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த அப்பத்தாவின் மூச்சுக் காற்றோடு சேர்ந்து கலந்தது....






காலடித் தடம் தேய்ந்து மறைய, கலங்கிய கண்களுடன்,முத பஸ்ஸுக்குப் போய்க் கொண்டிருந்தார் தாத்தா தேடிப் பிடித்துக் கூட்டி வந்த...

கண்ணுச்சாமி!



(2008 ஆனந்த விகடன் தீபாவளி மலரில் "அப்பத்தா" என்ற தலைப்பில் வெளிவந்த "பாரதிகிருஷ்ணகுமார்" அவர்களின் சிறுகதை,இது)

 



தொடர்புக்கு.... கைப்பேசி : 94442 99656


மின்னஞ்சல்: bkkumar@live.com

http://bharathikrishnakumar.blogspot.com
http://www.bkkumar.co.cc


பாரதிகிருஷ்ணகுமார்,


the roots,
new no 1, old no 19, நாவலர் தெரு,
தேவராஜன் நகர்,
தசரதபுரம்,
சாலிக்கிராமம்,
சென்னை-93
pin: 600093



கதையின் கதை.

இந்த கதையை படித்ததும், கொஞ்சம் ஆடித் தான் போனேன்.இந்த கதையில் வரும் கண்ணுச்சாமியைப் போல ,
இதே காரணத்துக்காக இதே சம்பவம் எனக்கு நெருக்கமான நண்பர்கள் வட்டத்தில் நடந்தது  என்பதால்...!


இந்த உண்மை,ஒற்றுமை, என்னைத் தூக்கி வாரிப்போட்டது
உண்மைக்கு ஒரு முகம் தான்.பொய்யுக்குத்தான் பலமுகங்கள்!


இந்த வகையில்,இந்த கதை என்னோடு சம்பந்தப்பட்ட ஒன்றனதால்,எனக்கு பிடித்தமான கதையாகிப் போனது!


பாரதிகிருஷ்ணகுமார் அவர்கள் இந்த கதை வந்த கதை பற்றிச் சொன்னது.


இந்த கதையில் வரும் தாத்தாவும்,அப்பத்தாவும் எனக்கு நெருக்கமான கதாபாத்திரங்கள்.என் சொந்த தாத்தா பாட்டி.இந்த கதையில் வருகிற கண்ணுச்சாமி என்பவரின் உண்மையான பெயர் நாரயணசாமி!


என் கல்லூரிக் காலத்தில் ஒரு நெசவுத் தொழிலாளியாக இருந்தவர் இந்த நாரயணசாமி!




.எல்லோரின் தறியும் நின்றாலும, அவரின் தறி எப்போதும் நிற்காது,ஓடிக் கொண்டே இருக்கும்.


அவரிடம் தயக்கத்தோடு ஒருநாள் கேட்டேன், "நீங்க ஏன் இன்னும் கல்யாணமே செஞ்சுக்கலைன்னு"




நான் ஒரு பொண்ண காதலிச்சேன்.சந்தர்ப்பவசத்தால, அவ வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டா,


அவ தான் எனக்கு கொடுத்த வாக்க காப்பத்தல.


நான் அவளுக்கு கொடுத்த வாக்க, காப்பாத்திக்கிட்டு இருக்கேன் என்றாராம்,நாரயணசாமி.


அந்த நாரயணசாமி இப்ப உயிரோட இருக்கிறாரா? என்று கேட்டேன.இப்ப அவர் உயிரோட இல்ல என்றார்,பாரதிகிருஷ்ணகுமார்.


உயிர் தறி அறுந்தது!...




இந்த கதைகளில் வரும் சம்பவங்கள்,மனிதர்கள்,இடங்கள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்.இந்த கதையின் உள்ளடக்கம் எங்காவது மூலையில்,எங்காவது ஒரு இடத்தில் நடக்கிற,இன்னும் நடந்து கொண்டிருக்கிற நிஜம் என்று பாரதிகிருஷ்ணகுமார் சொன்ன போது மனசு கனத்துத் தான் போகிறது...




எனக்கு நம்பிக்கை இருக்கிறது...!


மனிதம் செத்துப் போய் விடாது, என்று!


இந்த நம்பிக்கையை இந்த கதை விதைக்கிறது.


அடையாளமாகத் தொங்குகிறது.


உன் கழுத்தில்


நம் காதலை படுகொலை செய்த தூக்குக் கயிறு!


_புதுவை,மா.ஞானசேகரன்


(கைப்பேசி: 98425 79597)








வெள்ளி, ஜனவரி 9

பல இமெயில்களைத் திறக்க,அனுப்ப...ஒரே ஒரு இமெயில்..!

ஒரே ஒரு இமெயில் கணக்கைத் திறந்து,பல இமெயில்களைத் திறக்க,அனுப்ப...


தூக்கத்தில் நடக்கும் மனிதர்கள் பற்றி நமக்கு தெரியும்.
தூக்கத்தில் எழுந்து,சுய நினைவில்லாமல் இமெயில் அனுப்பிய வெளிநாட்டுப் பெண்ணைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அந்த அளவிற்கு மனிதர்களைப் பாதிக்கிற,மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக இமெயில் மாறி வருகிறது.

நம்மில் பலர் புதுப் புது இமெயில் கணக்குகளை திறந்து வைத்து விட்டு,திறக்காமலேயே விட்டுவிடுவதால் தானாகவே மூடப்படும் இமெயில் கணக்குகளுக்கு சொந்தக்காரர்களாக இருப்போம்!

ஒரே ஒரு இமெயிலை திறந்து, எல்லா இமெயில் இன்பாக்ஸ் பெட்டிகளை திறக்க முடியும்.

அதைப் போலவே...

வேறு வேறு இமெயில் பெயர்களிலிருத்து, அதுவும் ஒரே ஒரு இமெயில் கணக்கை மட்டும் திறந்து கொண்டு அனுப்ப முடியும் என்றால்...

நம்புகிற மாதிரியா இருக்கிறது?

ஆம் ! முடியும் என்கிறது, ஜிமெயில்!

அது எப்படி என்று பார்ப்போம்?

http://www.gmail.com/

என்ற இணைய பக்கத்தை திறங்கள்! ஜிமெயிலில் இமெயில் கணக்கு வைத்துக் கொள்ளாதவர்கள் ஒரு புதிய கணக்கு ஒன்றை, தேவையான விவரங்களை நிரப்பி துவக்கிக் கொள்ளுங்கள்!


யூசர் அய்டி,பாஸ்வேர்ட்டை நிரப்பி உங்களுக்கான இமெயில் பக்கத்தைத் திறந்து கொள்ளுங்கள்.


வலது மேல் மூலையில் இருக்கும்


settings
என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


மாறித் திறக்கும் புதிய பக்கத்தில்

accounts
என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


add another e mail address
என்ற இணைய லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


சின்ன விண்டோ ஒன்று திறக்கும்.


சேர்க்க வேண்டிய இமெயில் முகவரியை தவறில்லாமல் தட்டச்சு செய்யுங்கள்.


அதே விண்டோவில் இருக்கிற


specify a different reply to address(optional)


என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


இந்த வசதி மூலம் இமெயிலை பெறுபவர் reply செய்தால்,அதே முகவரிக்கு பதில் போகாமல் வேறு ஒரு இமெயில் முகவரிக்கு பதில் போகும்படி திருப்பி அனுப்புகிற வசதியாகும்.அதெல்லாம் தேவையில்லை என்று உங்களுக்குத் தோன்றினால் விட்டு விடுங்கள். இது உங்கள் விருப்பத் தேர்வு அவ்வளவுதான்!





எல்லாம் சரியாக நிரப்பிய பிறகு


next step
என்ற பட்டனை தட்டி விடுங்கள்!




அதே popup விண்டோவில் சேர்க்க விரும்புகிற, இமெயிலுக்கு உறுதி செய்கிற இணைய லிங்கை அனுப்பி வைத்த வெற்றி செய்தி கிடைக்கும்.அந்த விண்டோவை மூடுங்கள்.


சேர்க்க விரும்புகிற இமெயில் இன்பாக்ஸை திறந்து, இமெயில் முகவரியை உறுதிசெய்ய வந்திருக்கும் இமெயிலை திறந்து உறுதி செய்யுங்கள்.


இனி ஜிமெயில் accounts என்ற பகுதியில் சேர்க்கப்பட்ட இமெயில் முகவரி


edit
delete
make default


போன்ற வசதிகளோடு தயாராக இருக்கும்.


இது போல எத்தனை இமெயில் கணக்குகளையும் இணைத்துக் கொள்ள முடியும். இந்த வசதி சரியாக வேலை செய்கிறது.


make default என்ற வசதியை தேர்ந்தேடுத்து உங்கள் மெயின் இமெயில் முகவரியை தேர்ந்தெடுக்கலாம்.


இந்த வசதி மூலம் இமெயில்களை ஒரே இமெயில் கணக்கிலிருந்து அனுப்ப மட்டுந்தான் முடியும். பெற முடியாது.

ஜிமெயிலில் 5 இமெயில் கணக்குகளை மட்டும் முழுமையாக பராமரிக்க முடியும்.


அதை செய்யல்படுத்த accounts என்ற லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


add another mail account லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


வரும் popup விண்டோவில் முழு இமெயில் முகவரி நிரப்பி
next step பட்டனைத் தட்டினால்


password போன்றவைகளை நிரப்பி


add account லிங்கின் மேல் கிளிக் செய்யுங்கள்.


தானாகவே அந்த இணைக்கபட்ட இமெயிலின் முழுமுகவரியின் பெயரோடு ஜிமெயில் ஒரு புதிய போல்டரை உருவாக்கியிருக்கும்.


நேராக ஜிமெயிலின் இன்பாக்ஸ் அல்லது அந்த முகவரி உள்ள போல்டருக்கு வரும்படியான வசதியையும் நீங்களே கூட தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


யாகூ,ஜிமெயில் கணக்குகளை இப்படி இணைக்க முடியும். வேறு சில இமெயில்(rediffmail) நிறுவனங்கள் பணம் கட்டினால் மட்டுமே வேறு இமெயில் கணக்குகளோடு இணைக்கும் வசதியைத் தருகின்றது.


இப்படி இணைக்கப்படும் 5 இமெயில் கணக்குகளை ஜிமெயிலின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும்.அந்த 5 இமெயில்களின் எல்லா இமெயில்களையும் இப்படிப் படிக்க, பதில் அனுப்ப முடியும்.


எல்லாம் முடிந்த பிறகு composemail லிங்கின் மேல் கிளிக் செய்து பாருங்கள்.




ஒரு அதிசயம் நடந்து இருக்கும் பாருங்கள்!


from என்ற இடத்தில் drop down box என்னும் பெட்டியில் நீங்கள் சேர்த்த எல்லா இமெயில் முகவரிகளும் பட்டியல் இடப்பட்டிருக்கும்.




தேவையான இமெயில் முகவரிகளை இனி தேர்ந்தெடுத்து, அனுப்புங்கள்...!


When I receive a message sent to one of my addresses:
(மறக்காமல் reply செய்தால்)


Reply from the same address the message was sent to
(அந்த, அந்த இமெயில் முகவரிகளுக்கு மட்டுமே பதில் போக வேண்டும்)




அல்லது



Always reply from my default address
(உங்கள் மெயின் இமெயில் முகவரிக்கு மட்டும் பதில் வர வேண்டும்)




(இரண்டில் ஒற்றை தேர்ந்தெடுங்கள்)

 
வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு