வெள்ளி, ஆகஸ்ட் 29

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 3






பாகம் 3
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை



வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய ஏட்டு சின்னசாமி ஒரு மூலையில் தன் மகன் செண்பகராமன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.நாலைந்து அடிகளும் அடித்தார்.அப்பவும் கோபம் தீராமல் தன் இடுப்புத் தோல் பெல்ட்டைக் கழற்றி ஓங்கினார்.அம்மா நாகம்மாள் தடுத்தி நிறுத்தி கணவரை சமாதானப் படுத்தினாள்.

பின்பு தன் மகனை தனியாக அழைத்து "உனக்கு எதுக்குடா இந்த வீண் வம்பு!மற்ற பிள்ளைகளைப் போல ஒழுங்காக நடந்து கொள்ளேன் டா" என்றாள்,அழும் குரலில் அம்மா.

வழக்கம் போல கிருஷ்ணசாமி அய்யரின் வீட்டிற்குச் சென்று முதல் நாள் நடந்த அத்தனை விஷயங்களையும் கூறினான். அவரும் வழக்கம் போல எரிகிற மனசில் எண்ணெயை ஊற்றி சுதந்திரக் கனலை மேலும் ஜ்வாலையுடன் பிரகாசிக்கச் செய்தார்.

அப்போது அவனுக்கு வயது பதினாறு தான்!

பள்ளியில் ஆண்டுகள்தோறும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற செண்பகராமன்,அந்த ஆண்டு தேர்ச்சி அடையவில்லை.

தகப்பனார் மிகுந்த கவலையோடு தனது நண்பர் சரித்திர ஆசிரியர் செரியனிடம் முறையிட்டார்.அந்த ஆசிரியரின் முயற்சியால் அந்த ஆண்டு தேர்ச்சி பெற்றான்.

செண்பகராமன் படிப்பில் காட்டும் அக்கறையைவிட, சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டில் தான் தீவிரமாக இருக்கிறான் என்று ஆசிரியர் செரியன் அவனுடைய அப்பாவிடம் தெரிவித்தார்.

பிரிட்டிஷாருக்கு எதிரியாக மாறினால் தனது மகனின் எதிர்காலமே அல்லவா கேள்விக்குறியாகி விடும் என்று நினைத்த போது அவரை கவலை இருட்டு சூழ்ந்து கொண்டது.

திருவனந்தபுர பகுதிகளில் சர்க்காருக்குச் சேர வேண்டிய வரிகளை வசூலிக்க அதிகாரிகள் தண்டோராக்காரனுடன் கிராமம் கிராமமாகச் சென்றனர்.இதனை அறிந்த செண்பகராமனும் தனது நண்பர்களுடன் அந்த அதிகாரிகளை பின் தொடர்ந்தான்.

வரி செலுத்தாதவர்கள் வீட்டு வாசற் கதவுகள்,கட்டை வண்டிகள்,உழவு மாடுகள்,வீட்டிலுள்ள தானிய மூட்டைகள் மற்றும் இதர சாமான்களையெல்லாம் ஜப்தி செய்வதிலேயே குறியாக இருந்தார்கள்.

அம்மக்களின் கண்ணீர்,அழுகைகளை சட்டை செய்ய வில்லை.

இதனையெல்லாம் கண்ட செண்பகராமன் திடீரென அக்கூட்டத்தினுள் புகுந்தான்.

"நாம் இந்தியர்கள் நாம் ஏன் அன்னியர்களுக்கு வரி செலுத்த வேண்டும்?தயவு செய்து இனி வரியைச் செலுத்தாதீர்கள்" என்று முழங்கினான்.

இந்த எதிர்பாராத சூழ்நிலையைக் கண்ட அடிமை அதிகாரிகள் திடுக்கிட்டனர்!


அதிகாரிகள் மேலும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அன்று முதல் செண்பகராமனின் உதடுகள் அசைந்தால் எல்லா கிராமங்களுமே அசையும் நிலைக்கு வந்து விட்டது.

ஆத்திரம் அடைந்த அதிகாரிகள் செண்பகராமன் பற்றிய,அத்தனை விவரங்களையும் சேகரித்த ரகசியக் குறிப்புகளை மேல் அதிகாரிகளுக்கு அனுப்பினார்கள்.

தினமும் கல்லூரியில் செண்பகராமன் பிரின்ஸ்பால் மற்றும் இதர ஆசிரியர்களைச் சந்திக்கும் போதெல்லாம் தனது வலக் கையை உயர்த்தி "ஜெய்ஹிந்த!" என்று கோஷமிட்டு மரியாதை செலுத்தினான்.இதர மாணவர்களையும் "ஜெய்ஹிந்த்" என முழங்க முடுக்கி வந்தான்.இந்த கோஷமே நாளாடைவில் கல்லூரி மற்றும் இதர இடங்களிலும் பிரபலமானது!

இந்த ஜெய்ஹிந்த் கோஷம் அந்நாளில் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பான சொல்லாக இருந்ததால், கல்லூரி நிர்வாகம் செண்பக ராமனைப் பற்றி அவரது தகப்பனாருக்கும்,கல்வித் துறை மேலதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியது.

செண்பகராமனை தீவிரமாகக் கண்காணியுங்கள்! அவசியம் ஏற்பட்டால் கல்லூரியிலிருந்தே தூக்கும்படி கல்வித் துறை அதிகாரிகளிடமிருந்த பதில் வந்தது.

அந்நாளில் திருவனந்தபுரம் நகரவீதிகளில் அநாகரிகத் தோற்றத்தோடு ஓர் அய்ரோப்பியர் அலைந்து திரிந்தார்.சுமார் 55 வயதான அவர் பெயர் சர் வால்டர் வில்லியம்ஸ் ஸ்டிரிக்லாண்டு.பரட்டைத் தலைமுடி,அதில் எண்ணெய் அழுக்கேறிய தொப்பி,சாயம் வெளுத்த உள்சட்டை, அதனை மறைக்க பித்தான் இல்லாத ஒட்டுத் தையல்கள் போட்ட சுருக்கம் நிறைந்த கோட்டு, கிழிந்த முழுக்கால் நிஜார்,கால்களில்
பாலிஷ் இல்லா பூட்ஸ்,எப்போதும் தோளில் ஒரு தொம்மைப் பை, கையில ஒரு பொத்தல் குடை. அந்த மனிதர் எப்போதும் தனிமையில் திரிந்தார்.

இந்த அபூர்வ மனிதரை அரைப் பைத்திய அய்ரோப்பின் எனக் கேலியாக அழைத்தனர்.

செண்பகராமனும் அவருடைய உயிர் நண்பன் பத்மநாபனும் ஸ்டிரிக்லாண்டு எங்கிருந்தாலும் சந்தித்து வேடிக்கையாகப் பேச்சுக் கொடுப்பதுண்டு.நாளடைவில் இருவருமே அவருக்கு நெருங்கிய நண்பர்களாயினர்.ஒரு நாள் பேச்சுவாக்கில் ஸ்டிரிக்லாண்டு செண்பராமனிடம் எடுத்ததுமே, "தம்பி உனக்கு ஆங்கிலேயர்களைக் கண்டால் பிடிக்காதல்லவா?" எனக் கேட்டது செண்பக ராமனுக்கு வியப்பளித்தது.
"இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?ஆச்சரியமாக இருக்கிறதே" என்றார் பதிலுக்கு.


"செண்பகராமா! இது உனக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது சர்வசாதாரணமான விஷயம்!" என்றார்.

"இது வரையில் எனது பெயரை கூறினதே இல்லையே,உங்களுக்கு எப்படி எனது பெயர் தெரியும்?" என்று மீண்டும் ஆச்சரியப்பட்டான் ,செண்பக ராமன்.

பின்னர் தான் அவர் ஜெர்மனி நாட்டு அந்தரங்க உளவாளி,பெரும் செல்வந்தர்,உயர் கல்வி பயின்றவர்,திருமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளை கழிப்பவர்.தாவர இயல்,உயிரியல் படிப்பு சம்பந்தமான இயற்கை வளர்ப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை செண்பகராமன் தெரிந்து கொண்டான்.

ஒருநாள் அந்த பெரியவர் தன் வீட்டுக்கு செண்பகராமனையும், அவனின் நண்பனையும் அழைத்தார். அந்த வீடு ஒட்டடை அடிக்காமல் இருந்தது. அங்கிருந்த நீளவட்ட பெஞ்சில்,கண்ணாடி ஜாடிகளில் ஏராளமான பூச்சிகள்,விஷ ஜந்துக்களை அடைத்து வைத்திருந்தார்.தாவர சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களும்,சில தாவர இலைகளும் தரையெல்லாம் சிதறிக் கிடந்தன.

திடீரென அச்சமயம் அங்கு வீட்டுக்கூரையின் மீது பெரிய எட்டுக்கால் பூச்சி,வலையில் சிக்கிய ஈ ஒன்றின் உடலைத் தன் வாயால் கொத்திக் கவ்வியது.

"இப்போது கண்ட காட்சி பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்றார்,பெரியவர்.

"அந்த பெரிய சிலந்தி தான் பிரிட்டிஷ்காரர்கள்.அந்த ஈ தான் பாரத மக்கள்!" என்றான்,செண்பகராமன்.

"சபாஷ்! உன் தேசபக்தி வைராக்கியமாக மாற வேண்டும்" என்று தட்டிக் கொடுத்தார்.

"அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.

"நான் இன்னும் சில மாதங்களில் ஜெர்மனிக்குத் திரும்புகிறேன்.உனக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வரலாம்.உன் படிப்பைப் பற்றி கவலையே வேண்டாம்" என்றார்,பெரியவர்.

"செண்பகராமா! நான் உன் நண்பனல்லவா? உன்னை விட்டு பிரியமாட்டேன்.உன்னோடு நானும் வருகிறேன் "என்றான்,ராமனின் உயிர் நண்பன்,பத்மநாபன்.

"தம்பி! உன் பெற்றோர்கள் அனுமதித்தால் நிச்சயமாக உன்னையும் அழைத்துச் செல்வேன்",என்றார் பெரியவர்.

குழப்பமான மனநிலையோடு வீட்டுக்குப் போனான்.

மகனின் தீவிர நடவடிக்கையால் அவனுக்கு ஆபத்து வரும்.வேறு எங்காவது வெளியூரிலுள்ள தங்களது உறவினர்களிடம் அனுப்பி விடலாம் என்று முடிவு செய்தனர்,ராமனின் பெற்றோர்கள்.

ராமனும் பெற்றோர்களின் மனநிலையை அறிந்தான்.மெல்ல ஜெர்மனிக்குப் போகும் தன் ஆசையை தன் தாயிடம் வெளியிட்டான்.

கடைத் தெருக்களில் அலைந்து திரிந்து...


முழக்கம் உயரும்...

_ஆதிசிவம்,சென்னை.








காதலர் கட்சி துவக்கம்



நாகரிகம் வேண்டியதில்லை,முதலாவது எல்லா மக்களுக்கும் சோறு கண்டுபிடியுங்கள்!


-மகா கவி பாரதி





அகில இந்திய காதலர் கட்சி



வெளிநாடுகளில் இருந்து மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து நுழைந்த கெட்ட பழக்கம் ஒன்று நாளுக்கு நாள் முக்கியத்துவமான ஒன்றாக மாறி வருகிறது!

காதலர் தினம்!

காதலர் கட்சி என்ற ஒன்று கடந்த பிப்ரவரி 14(காதலர் தினம்) அன்று தொடங்கப் பட்டது என்ற செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது! காதலர்களுக்கு உதவுவது,சேர்த்து வைப்பது என்பதுதான் முக்கிய குறிக்கோளே!

இனி தான் இந்த கட்சியை முறைப்படி பதிவு செய்யப் போகிறேன். விரைவில் இணையதளம் ஆரம்பிக்கப் போகிறோம் என்றும் சொன்னார்,காதலர்கட்சி நிர்வாகி குமார்.

பச்சைத் துரோகம்,நம்பிக்கை துரோகம்,கண்ணீர்,விஷம்,தூக்குக் கயிறு,ஏமாற்றம்,இரத்தம்,தற்கொலை என்று காதல் இன்னொரு முகம் காட்டினாலும் காதலுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது!

காதல் பைத்தியக்காரத் தனந்தான்

ஆனாலும்

காதல் எல்லோருக்கும் பிடிக்கும்

எல்லோருக்குள்ளும்
ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான்!

காதலர் கட்சியை வாழ்த்துவோம்!


தொடர்புக்கு...

அகில இந்திய காதலர் கட்சி,
பி.குமார்
# 23, பி பிளாக், இரண்டாவது தெரு,பூபதி நகர்,கோடம்பாக்கம்,சென்னை-24. pin 600 024.
கைப்பேசி: 9380422533


address:
(all india lovers party,
no 23, b-block, second street,bhoopathy nagar, kodampakkam,chennai-24.
pin: 600 024.
mobile:9380422533 )


_ஆதிசிவம்,சென்னை.



திங்கள், ஆகஸ்ட் 25

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 2









பாகம் 2
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை







அவனுக்கு ஒவ்வொரு படத்திலுள்ளவர் பற்றியும் கதை கதையாகக் கூறுவாராம்.

ஒரு சமயம்,வீதிகளில் ஆங்கிலேயருக்கு எதிரான கோஷங்களுடன் மக்கள் ஊர்வலமாகச் செல்வதைக் கண்ட செண்பகராமனும்,திடீரென்று தன் வீட்டு வாசல் பக்கமாக வந்த கூட்டத்தினருக்கு ஆதரவாக கைகளை உயர்த்தி உற்சாகத்தோடு கோஷமிட்டான்.

"முதல் முழக்கம்!"

கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் இச்சிறுவனின் துணிச்சலைப் பாராட்டி ,தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி அவனுக்கு அணிவித்தார்.

"எங்கே சொல்லு பார்க்கலாம்!வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே!ஆங்கிலேய ஆட்சி ஒழிக!", என்று சொன்னதையே செண்பகராமனும் திருப்பி அப்படியே சொன்னான்.மகிழ்ச்சி அடைந்த பெரியவர் அவனைக் கொஞ்சிக் கொண்டாடினார்.

வாயில் கோஷத்தோடும்,கழுத்தில் மாலையோடும் வீட்டுக்குள் நுழைந்த மகனின் விபரீதக் கோலத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள்!,தாய்.

"அய்யோ,மகனே நீ செய்வது ராஜாங்க குற்றம்.உங்க அப்பாவும் அந்த ஆங்கிலேயே சர்க்காரிடம்தான் போலீஸ் உத்தியோகம் பார்த்து வருகிறார்.இப்படி கோஷம் போடுபவர்களைப் பிடித்து ஜெயிலில் தள்ளுவதுதான் அவருடைய வேலையே. நீ இந்த மாதிரி நடந்து கொண்டால் உன்னை ஜெயில் போட்டு, உன் அப்பாவையும் உத்தியோகத்திலிருந்து நீக்கி விடுவார்கள்", என்று அம்மா அழுது புலம்பினாள்.

தான் வழக்கமாக செல்லும் கிருஷ்ணசாமி அய்யரிடம் போய் நடந்தவைகளைக் கூறினான்.

"இது பாரத மாதா படம்.இவளது கைகளிலும் கால்களிலும் தான் ,அந்த வெள்ளையர்கள் அடிமை விலங்குகளைப் போட்டுப் பூட்டி விட்டார்கள்.அந்த அடிமை விலங்குகளை உடைத்தெறிவது பாரத மாதாவின் பிள்ளைகளாகிய நம் கடமையில்லையா?" என்றார்.

உணர்ச்சியோடு கோஷமிட்டுக் கொண்டே நண்பர்களின் வீடுகளை நோக்கி ஓடினான்,சிறுவன் செண்பகராமன்.

"சிறுவர்களாகிய நாமும் நம் பாரத தேச விடுதலைக்காகப் பெரியவர்களைப்போல வீதிவீதியாய் கோஷமிட்டுச் செல்ல வேண்டும்.இதனால் என்ன ஆபத்து வந்தாலும்,அதனைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும்", என்றான் ஆவேசத்தோடு.நண்பர்களும் சம்மதித்தனர்.செண்பகராமனும் ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் என்பதனை ஏற்படுத்தி அதற்கு தானே தலைவனாகவும் அதில் எல்லா நண்பர்களையும் அங்கத்தினராகச்
சேர்த்தான்.

அன்றொரு நாள் காலை மஹாராஜா ஹைஸ்கூலுக்குச் சென்ற செண்பகராமன் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு...

வகுப்புகள் தொடங்க மணி அடித்தவுடன், "வந்தே மாதரம்! பாரத மாதாவுக்கு ஜே! ஆங்கிலேய ஆட்சி ஒழிக!" என உரத்த குரலில் கோஷமிட்டனர்.

திடுக்கிட்ட தலைமை ஆசிரியர் கையில் நீண்ட பிரம்புடன் தனது அறையிலிருந்து வெளிவந்தார்.

தலைமை ஆசிரியருக்குப் பயந்து சில மாணவர்கள் மட்டும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தார்கள்.

"செண்பகராமா! இந்த வீண் கோஷங்களால் உங்களுக்கு கெடுதல்கள் நேருவதுடன்,நம்பள்ளிக்கும் வீண் கெட்ட பெயர் தான் உண்டாகும்.நல்ல பிள்ளையாக வகுப்பறைக்குச் செல்லுங்கள்"என்றார்,தலைமையாசிரியர்.

"அய்யா!நாங்கள் போடும் இக் கோஷங்கள் எங்கள் சுயநலத்திற்காக அல்ல! நாடு விடுதலை பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தால் தான் .இதில் தாங்களும், மற்ற ஆசிரியர்களும் சேர்ந்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறோம்" என்றான்,கொஞ்சம் கூட பயமில்லாத செண்பகராமன்.

கோபம் அடைந்த தலைமையாசிரியர் எதுவும் சொல்லாமல் தனது அறைக்குத் திரும்பினார்.

திடீரென்று செண்பகராமனின் நண்பர்கள் சிதறி ஓடினார்கள்.

பள்ளி வளாகத்திற்குள் நாலைந்து போலீஸ்காரர்கள் லத்தியுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.

வந்த போலீஸ்காரர்களில் ஒருவர்,செண்பகராமனின் காதை பலமாகப் பிடித்துத் திருகி,தலையை பிடித்து குலுக்கினார்.இரண்டு மூன்று லத்தி அடிகளும் கிடைத்தது. அப்படிச் செய்த போலீஸ்காரர் வேறு யாருமில்லை,செண்பகராமனின் தந்தை தான்!

அந்நாளில் சிறுவர்கள் ஏதேனும் குற்றங்கள் செய்தால்,சிறைப் பள்ளிக்கு அனுப்புவது உண்டு. மற்றும் சிலரை கொண்டுபோய் ஊருக்கு வெளியே நாலைந்து மைல்கள் தூரத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் வழக்கம் இருந்தது.

அங்கிருந்து பசி,கால்வலி கஷ்டங்களோடு நடந்தே ஊருக்கு வர வேண்டும்.

அதன்படி போலீசும், செண்பகராமனையும், அவனது நண்பர்களையும் திருவனந்தபுரத்திற்கு வெளியே போய் விட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

பசி கண்ணை மறைத்தது.செண்பகராமனுக்கு ஒரு உத்தி பளிச்சிட்டது.

எல்லோருக்கும் அங்குள்ள ஸ்ரீ பத்மநாப தர்மஸாலா என்ற ஊட்டுப் புறைக்குள் நுழைந்தார்கள்.

"நாங்கள் பள்ளி மாணவர்கள்,நகரை விட்டு வெகுதூரம் நடந்தே வந்துவிட்டோம்,பசிக்கிறது என்றான்",செண்பக ராமன்.நம்பூத்ரிக்கு அந்த மாணவர்கள் மீது இரக்கம் பிறந்தது.

பிறகென்ன? பலமான விருந்து தான்!

மாலைப் பொழுதாகி விட்டது,இருட்டுவதற்குள் வீட்டுக்கு எப்படி நடந்து செல்வது?

அந்த சமயத்தில் தான் ஒரு கோச்சு வண்டியிலிருந்து ஒரு போலீஸ்காரர் இறங்கி தனது வீட்டிற்குச் சென்றார்.உடனே செண்பகராமனும் தன் நண்பர்களுடன் அவரிடம் சென்றான்.

"உல்லாசப் பயணம் வந்த வெளியூர் மாணவர்கள் நாங்கள்,வழி தவறி விட்டது.இன்று மாலைக்குள் திருவனந்தபுரத்திலுள்ள தங்களது உல்லாச கோஷ்டியுடன் சேர்ந்து ஊருக்குப் புறப்பட வேண்டும்.இதற்கு நீங்கள் தான் எப்படியாவது உதவி செய்ய வேண்டுமென்று",தங்களது ஊர்,பெயர்களை மாற்றி சரளமான ஆங்கிலத்தில் உருக்கமாகக் கேட்டான்.அவனது பேச்சில் மயங்கிய அந்த போலீஸ் அதிகாரி,தன்னை ஏற்றி வந்த
அதே கோச்சில் வழி தவறிய மாணவர்களை திருவனந்தபுரத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி கோச்சுக்காரனிடம் உத்தரவிட்டார்.

பாதி வழியில் அந்த வண்டிக்காரருக்கு திடீரென ஒரு சந்தேகம்.போலீஸ்காரர்கள் ஊருக்கு வெளியே விடப்பட்ட தண்டனை பெற்ற மாணவர்களோ,இவர்கள்?

திடீரென வண்டியை நிறுத்தி அவர்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்,குதிரை வண்டிக்காரர்.

"உல்லாச பயணமாக திருவனந்த புரத்துக்கு வந்தோம்.நேற்று அந்த போலீஸ் அதிகாரியின் வீட்டிற்கு வந்தோம்.அவர் எங்களைத் தங்கிப் போகும்படிச் சொன்னார்.இவன்தான் அவருடைய நெருங்கின உறவுக்காரன்.இவனுடைய தகப்பனார் கொல்லத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார்.அவரும் உங்க போலீஸ் அதிகாரியும் நெருங்கிய நண்பர்கள் ! "என தனது நண்பன் ஒருவனையும் சுட்டிக்காட்டி மிகவும்
நம்பும்படியாகவும் பொருத்தமாகவும் கூறினான்.

வண்டிக்காரருக்கோ சந்தேகம் தீர வில்லை."தம்பிகளா! உங்களை பத்திரமாக நேராக திருவனந்தபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கே அழைத்துச் சென்று அங்கிருக்கும் ஒரு கான்ஸ்டபிளையும் உங்களுக்குத் துணையாக அனுப்பச் சொல்லுகிறேன்", எனக் கூறி குதிரையை தட்டிவிட்டார்.

குதிரை வண்டிக்காரனின் விபரீத பேச்சைக் கேட்டு திடுக்கிட்டாலும்,யாரும் வெளிக்கட்டிக் கொள்ளவில்லை!

போலீஸ் ஸ்டேஷன் வந்ததும் வண்டிக்காரன்,வண்டித் திரையைத் தள்ளிப் பார்த்தான்.

யாருமே இல்லை!

வரும் வழியில் ஊர்வலம் குறுக்கே வந்தததை சாதகமாக்கி தப்பிக்கச் சொன்ன செண்பகராமனின் சமயோசிதயோசனையைப் பற்றி வண்டிக்காரன் அறிந்திருக்க நியாயம் இல்லை.

செண்பகராமன் வீட்டிற்கு திரும்பி வருவதைக் கண்ட அன்னை நாகம்மாள் அவனைப் பரபரப்புடன் அன்புடன் தழுவிக் கட்டிக் கொண்டாள்.தன் அம்மாவிடம் ஏமாற்றி ஊர் வந்த கதை முழுவதையும் சொன்னான்.


முழக்கம் உயரும்...



_ஆதிசிவம்,சென்னை.














அறிவு அழிப்பதற்காக வளர்கிறது.

அன்பு வளர்வதற்காக அழிகிறது.


_லாங்பெப்ன.


வெள்ளி, ஆகஸ்ட் 22

"ஜெய்ஹிந்த் செண்பகராமன்"அவர்களின் கதை-பாகம் 1











பாகம் 1
"ஜெய்ஹிந்த் செண்பகராமன்" -அவர்களின் கதை





நம் இந்திய அன்னையை பிரிட்டிஷ் அரசு தன் ஆட்சியின் கீழ் அடிமை இந்தியாவாக மாற்றி இருந்த சமயம்...

1914 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் ஏற்பட்ட கடும் போர், முதல் உலகப் போராக வெடித்தது!

இந்தியாவை ஆக்கிரமித்திருக்கும் பிரிட்டன் படையைக் குறி வைத்து, "எம்டன்" என்ற ஜெர்மானிய போர்க் கப்பல்...

1914 செப்டம்பர் 10 ந்தேதி,வங்கக் கடலில் கல்கத்தாவிற்கு அருகே, ஆறு பிரிட்டன் கப்பல்களை மோதி மூழ்கடித்த நெருப்புச் செய்தி ,திசை எங்கும் தீயாய் பரவிய பிறகு தான் எம்டன் கப்பலின் பலம் பற்றி எல்லோருக்கும் தெரிந்தது!

அந்த எம்டன் கப்பல் தான்,அந்த அந்த இடத்திற்கு தக்கபடி,அந்த அந்த நாட்டு கொடியை பறக்க விட்டு, அந்த அந்த நாட்டிலேயே ,தனக்கு வேண்டிய எரி பொருள்கள்,பழுதுகளைப் பார்ப்பது,தன் படை வீரர்களுக்கு தேவையான உணவு போன்ற மற்ற பொருள்களைப் பெறுவது,எந்த நாட்டில் கப்பல் ஒதுங்குகிறதோ ,அந்த நாட்டு மொழியையே பேசி அசத்தும் சாமர்த்தியம்,எதிரிக் கப்பல்களை திடீர் திடீரென்று தாக்கி விட்டு,கடலுக்குள் மூழ்கி மறைந்து போகும் எம்டன் கப்பல் என்றால் அது "எமனே" ஏறி வரும் கப்பல் என்று எதிரிப் படைகள் அஞ்சி நடு நடுங்கிப் போகும்!

அந்த கப்பல் தான்...

1914 செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை துறைமுக கடலில் இருந்து கண்கள் பறிக்கும் "சர்ச்" லைட் டின் ஒளியை எல்லா திசைகளிலும் வீசியடித்து,இலக்குகளைக் குறிவைத்து தாக்கியது.


"ஸூப்ரா" என்ற பிரிட்டிஷ் கப்பல்,பர்மாஷெல் ஆயில் டாங்குகள்,சென்னை உயர்நீதிமன்றம் வெளி சுற்றுச் சுவரின் மீதும் காதைக் கிழிக்கும் இடியோசையோடு வெடித்த போது,எழுந்த கறுப்புப் புகை வானத்தையே மறைத்ததது.மொத்தம் 25 குண்டுகள் முழங்கிய பின்புதான்

பிரிட்டிஷ் கடற்படையினர் தங்களது சர்ச் லைட் ஒளியின் வெளிச்சத்தில் எம்டனைக்
கண்டுபிடித்து,தங்களது பீரங்கிகளைக் கொண்டு திருப்பிச் சுட்டது...

எம்டனை அல்ல,அது நின்ற அலைகளை...!

எம்டன் அலைகளுக்குள் சென்று மறைந்து விட்டது.

"குய்யோ முறையோ" எனக் கூக்குரலுடன் இரண்டு,மூன்று தினங்களில் ஏராளமான சென்னை மக்கள் வெளியூர்களுக்கு செல்ல தயாரானர்கள். பேருந்து ,தொடர் வண்டி நிலையங்களில் கூட்டம் நிரம்பி ,பிதுங்கியது, வழிந்தது...


இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பக்கம்,சூரியன் மறைந்து இயற்கை கவிதை எழுதும் மாலை நேரம்...

ஒரு மனிதர் ,அந்த மங்கிய வெளிச்சத்தில்...

அக்கடற்கரை மணலில் மண்டியிட்டு,மணல் தரையை முத்தமிட்டு,அதனைத் தனது இரு கைகளால் ஒற்றிய பின், அதிலிருந்து சிறிதளவு மணலை எடுத்துத் தமது நெற்றியில் திலகமாக இட்டுக் கொண்டார்.

சற்றுத் தூரத்தில் இரு மீனவர்கள் தனது செயலைக் கூர்ந்து கவனிப்பதை அறிந்து ,உடனே தம்மை நோக்கி வரும்படி அழைத்தார்.

தயங்கித் தயங்கி வந்த இருவரையும் நோக்கி சந்தோஷ கூச்சலிட்ட அந்த மனிதனைப் பார்த்து மிரண்ட இருவரும் பயந்து பின்னோக்கி ஓடுவதற்கு தயாரானார்கள்.

உடனே துரத்தி வந்த மனிதரோ, "என் அருமை சகோதரர்களே! ஓடாதீர்கள்!நில்லுங்கள்!" என்ற அந்த தமிழ் பேச்சுக் கேட்டு சிலையாக நின்றார்கள்.

தன்னருகில் வந்த அந்த இருவரையும் கட்டித் தழுவினார்.உடனே அவர்கள்,"உங்களை யாரென்று தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டனர்.

"நம் பாரத மாதா பெற்ற பிள்ளைகளில் நானும் ஒருத்தன்.உங்களில் ஒருவன்" ,என்றார்.

"வியப்பாகவே இருக்கிறது!அப்படியானால் நீங்கள் யார்?" என்றார்கள்,ஆர்வம் தாங்காமல்...

"இந்த திருவனந்தபுரம் தான்,நான் பிறந்த மண்!" என்றுக் கூறி ஒரு பிடி மணலை எடுத்துத் தனது கண்களில் ஒற்றிக் கொண்டார்.

"என் பெயர் செண்பகராமன் பிள்ளை!"

"செண்பகராமன்பிள்ளையா?...இந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்திற்கு எதிரியாகி,எங்கேயோ வெளி தேசத்தில் தலைமறைவாகிவிட்டதாகக் கூறும் அந்த செண்பகராமன் பிள்ளையா ,நீங்கள்?...
"
"ஆம்!.."

"அப்படியானால் இதுவரையில் எங்கிருந்தீர்கள்?"

"ஜெர்மனி...!"

"அது பிரிட்டிஷ்காரரின் எதிரி நாடாயிற்றே! அங்கிருந்து எப்படி இந்தியாவுக்கு வந்தீர்கள்?"

"எம்டன் கப்பலில்... ."

"சென்ற வாரம் மெட்ராசையே குண்டுகளை வீசியழித்த எம்டன் கப்பலிலா? என்றபடி அய்யோ ஆபத்து வந்து விட்டது!"என்று அந்த இருவரும் ஆளுக்கொரு திசையில் தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

"என் சகோதரர்களே ,ஓடாதீர்கள் நில்லுங்கள்!" என்று உரத்தக் குரலில் கத்தினார்.

"அய்யா நீங்களோ பிரிட்டிஷாருக்கு ஜென்ம விரோதி.உங்களையோ,உங்கள் தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரொக்கப் பரிசு தருவதாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த நிலையில் உங்களிடம் பேசுவதை யாராவது பார்த்தால்,எங்கள் தலைகளுக்குமல்லவா ஆபத்து!"

"என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.என்னை இப்போதே அந்த வெள்ளையர்கள் முன்னால் நிறுத்தி,அவர்கள் அறிவித்துள்ள அந்த ரொக்கப் பரிசு பெற்றுக் கொள்ளுங்கள்". என்றார்.

சிறிது நேரம் அமைதியாகவும்,மவுனமாகவும் இருந்த அம்மீனவர்கள்...



"எங்களை சந்தித்தது முதல் அன்புச் சகோதரர்களே என்றே அழைத்து வருகிறீர்கள்,உங்கள் உடம்பில் ஓடும் அதே இந்திய ரத்தம் தானே எங்கள் உடம்பிலும் ஓடுகிறது?உங்களைக் காட்டிக் கொடுக்க மனம் துணிவோமா? "என்றார்கள்,அன்பொழுக...

"உங்களுக்குள் எரியும் இந்த சுதந்திரத் தீ!,அத்தனை பேர்களின் உள்ளங்களிலும் எரிந்தால்,வெகு சீக்கிரத்திலேயே விடுதலை நிச்சயம்!",என்றார் .

"அய்யா! நீங்களும் எங்களுடன் இங்கேயே தங்கிவிடுங்கள்.உங்களை எவரிடமும் காட்டிக் கொடுக்காமல்,நாங்கள் காப்பாற்றுகிறோம் என்றார்கள்",அம்மீனவர்கள்.

"உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!இனியும் இங்கு தங்கி இருக்க எனக்கு நேரமில்லை.என்னுடைய
லட்சியங்களை நிறைவேற்றி முடிக்க வேண்டும். நான் போய் வருகிறேன்,விடை கொடுங்கள்!" என்றார்.

"அய்யா! உங்களை சென்று வாருங்கள் எனக் கூற எங்கள் மனம் இடம் தரவில்லை...ஆனால் நீங்கள் மீண்டும் எப்போது இங்கே திரும்புவீர்கள் என்பதை மட்டும் கூறிவிட்டுப் போங்கள்.அப்போதும் நாங்கள் வந்து உங்கள் வருகையை எதிர்பார்த்து காத்திருப்போம்",என்றார்கள்,கண்களில் கண்ணீர் மின்ன...

"என் இந்திய சகோதரர்களே ! நான் மீண்டும் இங்கு வருவதானால் ,சுதந்திர இந்தியாவின் சுயராஜ்ய கொடி பட்டொளி வீசிப் பறக்கும் நம் இந்தியக் கப்பலில்தான் நாடு திரும்புவேன்!இது உறுதி!!" எனக் கடல் மணலின் மீது தனது கையினால் அடித்து சபதம் செய்த பிறகு
கடற்கரைப் பக்கமாக விரைந்தான்,அந்த சுதந்திரச் சூரியன்...

அம்மீனவர்களின் கண்களில் கண்ணீர் கடல் நீராகப் பொங்க விடை பெற்ற...

"அந்த செண்பகராமன் தான் யார்?..."

1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 இல் திருவனந்தபுரத்தில் சின்னசாமிப் பிள்ளை,நாகம்மாள் என்ற தம்பதிகளுக்கு பிறந்த மூத்த மகனுக்கு செல்லமாக வைத்த பெயர் தான் வெங்கிட்டன்.அவன் தான் செண்பக ராமன்.
அவனின் தங்கையின் பெயர் பாப்பாத்தி அம்மாள்,தம்பியின் பெயர் சோமசுந்தரம்.

இளமையிலேயே பள்ளியில் எல்லாப் பாடங்களிலும் திறமைசாலியான மாணவன் எனப் பெயரெடுத்தான்.

அவனின் வீட்டுக்கருகிலேயே இருந்த கிருஷ்ணசாமி அய்யர் என்பவர், அந்நாளைய சுதந்திரப் போராட்ட வீரர்களாகிய சத்ரபதி சிவாஜி,ஜான்ஸிராணி,ஹைதர் அலி,திப்புசுல்தான்,ராஜாராம் மோகன்ராய்,கோபாலகிருஷ்ண கோகலே,குரு கோவிந்த்சிங்,லோகமான்ய திலகர் மற்றும் பலருடைய படங்களை மாட்டி வைத்து,விற்பனை செய்வார்.

சிறுவன் செண்பகராமன் அங்கு செல்லும் போதெல்லாம் கிருஷ்ணசாமி அய்யரும்...


முழக்கம் உயரும்...



_ஆதிசிவம்,சென்னை.





திங்கள், ஆகஸ்ட் 18

" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 12









பாகம் 12
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



அங்கு 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

ஆயினும் அடிகளார் போலீஸ் அனுமதியுடன் சமாதான யாத்திரை சென்றார்.கிறிஸ்தவப் பேராயருடன் குன்றக்குடி அடிகளார் பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார் என்பதை அறிந்த இந்து முன்னணி வழக்கம் போல இந்துக்களின் துரோகியே திரும்பிப்போ என அடிகளார் சென்ற இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டியது.

அடிகளார் அதைக் கண்டு சற்றும் பின் வாங்க வில்லை.சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பின்...

மெல்ல மெல்ல அமைதி திரும்பியது.

முன்பு அடிகளாரை குறை கூறிய அதே இந்து முன்னணி, அதன் பிறகு அவரைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது.

ஒரு சமயம் அடிகளார் தமது ஆதீன ஊழியர்களை அழைத்து," சிவகங்கை மகாராஜா நாளை குடும்பத்துடன் இங்கு வருகை தருகிறார்கள்.எனவே சுமார் நாற்பது பேருக்குத் தேவையான உணவுகளை மிகச் சிறப்பாகத் தயாரிக்க வேண்டும்", என்று வேண்டிக் கொண்டார்.

அதைக் கேட்ட ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.உற்சாகத்துடனும்,சுறுசுறுப்பாகவும் சிறந்த உணவு வகைகளை அவர்கள் தயாரித்தனர்.மன்னரின் வருகையை அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்க,அடிகளார் நாற்பது விவசாயக் கூலிகளை அங்கு அழைத்து வந்தார்.

"மகாராஜவிற்குத் தயாரித்த உணவுகளை இவர்களுக்குப் பரிமாறுங்கள்", என உத்தரவிட்டார்.

ஊழியர்கள் அதிர்ச்சியில் திகைத்தனர், "சிவகங்கை மன்னர் வருவதாகச் சொன்னீர்களே,சாமி?", எனக் கேட்டனர்.

"ஆமா...சொன்னேன்...இந்த உழைப்பாளிகளும் நமக்கு மன்னர்கள் தான்.எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாரதியார் பாடவில்லையா?"

"முதலிலேயே தாங்கள் இப்படிச் சொல்லியிருக்கலாமே, சாமி?"

"சொல்லியிருந்தால் சிறப்பாக உணவு சமைத்திருக்க மாட்டீர்கள்.மன்னருக்கு நாம் விருந்து படைப்பது பெரிய விஷயமல்ல.இந்த ஏழை எளிய தொழிலாளிகள் தங்கள் வாழ்நாளில் ஒரு போதும் பார்த்திராத உணவுகளை இப்போதும் நாம் படைக்கிறோமே,இதுதான் சிறப்பு" என்றார்,அடிகளார்.

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வைர விழாவுக்கு அப்போதைய தமிழக ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.அந்த விழா மேடையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு "கவுரவடாக்டர் "பட்டத்தை கவர்னர் வழங்கினார்.

"64 வயது நிறைந்த அடிகளார் சிறந்த புலமையாளர்.தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்.பட்டி மன்றங்களிலும்,வழக்காடு மன்றங்களிலும் தெளிவான சிந்தனையுடன்...பேசும் வல்லவர்.30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்.இவர் எழுதிய ஆலயங்கள் சமுதாய மையங்கள் என்ற நூலுக்கு தமிழக அரசு முதற்பரிசு வழங்கி பாராட்டியுள்ளது.

குன்றக்குடியைச் சூழ்ந்துள்ள சில கிராமங்களை அடிகளார் தத்து எடுத்து,நலிந்த பிரிவினர் உயர்வதற்கு வழி வகுத்தவர்.சுதேசி விஞ்ஞான இயக்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தமிழில் அறிவியலைப் பரப்பி வருகிறார்.16 கல்வி நிலையங்களை நிறுவி,சிறப்பாக அவற்றைச் செயல்படுத்துகிறார்.

தீண்டாமையை ஒழிக்கவும்,இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கவும் அல்லும் பகலும் அயராமல் அடிகளார் உழைத்து வருகிறார்."

இவ்வாறு விழா மேடையில் அறிவிக்கப் பட்டது.

13-04-95 வியாழக்கிழமை மாலையில்,குன்றக்குடி மடாலயத்தில் அடிகளாருக்குத் திடீரென மார்பு வலியும்,மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.உடனே அவரைக் காரில் ஏற்றி மதுரைக்கு கொண்டு வந்தனர்.மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் அடிகளார் சிகிச்சைக்குச் சேர்க்கப் பட்டார்.

குன்றக்குடியிலிருந்து அவரது கார் புறப்படும் முன் மதுரையில் உள்ள மூன்று முக்கிய பிரமுகர்களுக்கு டெலிபோன் மூலம் தகவல் பறந்தது.அந்த மூவரில் ஒருவர் தான் கருணைதாசன்.மாநகராட்சி முன்னாள் உறுப்பினரான அவர்,திருவருள் பேரவையின் மாநில இணைச் செயலாளரும், தமிழ்பாவை மாத இதழின் ஆசிரியரும் ஆவார்.

இரவில் நேரம் கழித்து வந்த கருணைதாசனிடம் குன்றக்குடியிலிருந்து போன் வந்த செய்தி தெரிவிக்கப் பட்டது.உடனே அவர் குன்றக்குடி மடாலயத்திற்கு போன் செய்தார். அந்த நேரத்தில் அந்தப் போனை எடுத்துப் பேச அங்கே யாரும் இல்லை.

மறுநாள் அடிகளார் மீனாட்சி மருத்துவமனையில் இருப்பதைக் கேள்விப் பட்டு அங்கு விரைந்தார்,கருணைதாசன்.

"நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?", என்று கேட்டார்,அடிகளார்.

"சாமி, மதுரைக்கு வந்திருப்பது எனக்கு எப்படித் தெரியாமல் போகும்?", என்று கருணைதாசனும் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.சுமார் அரை மணி நேரம் இருவரும் உரையாடினார்கள்.அப்போது அடிகளார் தெளிவாகவும்,தெம்பாகவும் இருந்தார்.

அடுத்த நாள்...

மதுரைப் பேராயர் ஆரோக்கியசாமியோடு, கருணைதாசனும் பார்க்கப் போய் இருந்தார்.

அடிகளாருக்கு தூக்க ஊசி போடப் பட்டிருந்தது.இவர்களைப் பார்த்த அடிகளார் சோகச் சிரிப்புடன் பேசினார்.

அடிகளாரை பரிசோதித்த மருத்துவரிடம் போய் அடிகளாரின் உடல் நலம் பற்றி விசாரித்தபோது...

அதிர்ச்சியான செய்தி தான் கிடைத்தது!

"அடிகளாரின் இதயத்தில் ஒரு வால்வு பொருத்த வேண்டும்.அமெரிக்காவில் தான் இந்த சிகிச்சையைச் சிறப்பாகச் செய்கிறார்கள்", என்றார்,மருத்துவர்.

கவலை முகமாக இருந்த கருணைதாசனின் முகம்,கலவர முகமானது. "டாக்டர் அதிகம் பேச வேண்டாம் என்கிறார்...நாம் திரும்பிப் போவோம்", என்று வாசலில் நின்ற காரில் இருவரும் ஏறியபோது,அடிகளாரின் உதவியாளர் அவசரமாக ஓடி வந்தார்,"சாமி, உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்கள்", என்று கருணைதாசனிடம் தெரிவிக்க மீண்டும் அடிகளாரிடம் விரைந்தார்,கருணைதாசன்.

கட்டிலில் ஒருபுறம் சாய்ந்து படுத்திருந்த அடிகளார்,கருணைதாசனின் கையைப் பற்றி உட்காரச் சொன்னார்."அமெரிக்கா சென்று இதய ஆப்ரேசன்(வால்வு மாற்ற சிகிச்சை)செய்து கொள்ள தீர்மானித்து விட்டேன்.

சென்னை மைலாப்பூரில் உள்ள கற்பக விடுதி(குன்றக்குடி ஆதினத்திற்கு உரியது)யில் என்னை வந்து பாருங்கள். நாம் அமெரிக்காவிற்குப் போவோம்", என்றார்.

ஏப்ரல் 16 ஆம் தேதி அவர் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்படுவதற்குத் தேவையான பாஸ்போர்ட்,விசா,விமான டிக்கெட் அனைத்திற்கும் அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலையில் மதுரையிலிருந்து , சென்னைக்குப் புறப்பட்டுச் செல்ல அவரின் உடல்நிலை ஒத்துழைக்க வில்லை.

15 ஆம் தேதி நள்ளிரவுக்கு சற்று முன்னதாக (11-45 மணியளவில்) அடிகளாரின் திணறித் துடித்த இதய துடிப்பு சப்தம் இல்லாமல் நின்று போனது!

தமிழ்நாட்டின் இதயமாக குன்றக்குடியில்துடித்துக் கொண்டிருந்த அந்த இதயம் நின்று போனது...!

மதுரையிலிருந்து வந்த அடிகளாரின் உடல், அந்த நள்ளிரவில் 2-30 மணிக்கு குன்றக்குடியை அடைந்ததும்...

அழுகையும்,ஒப்பாரியும் கூக்குரலும், கதறலும்,ஓலமும் அந்த இரவையும்,திசைகளைக் கிழித்ததுக் கொண்டு, அந்த வானத்தை நோக்கி உயர்ந்தது!

தமிழ் நாட்டின் உயர்வுக்கு மலையாய் எழுந்த அடிகளாரின் முன்னால் ஒட்டு மொத்த தமிழ்நாடே தலை குனிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது...!

சில உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் நம் மனம்...

யாராலும் சமாதானம் சொல்ல முடியாத,ஆறுதல் சொல்ல முடியாத சில இழப்புகளை,உண்மைகளை, நம் மனம் ஏற்க மறுக்கிறது...


.....முற்றும்.....

_ஆதிசிவம்,சென்னை.






" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 11






பாகம் 11
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



கோவிலைத் தழுவிய குடிகளும்,குடிகளைத் தழுவிய கோவிலும் என்ற கொள்கையைத் தான் அடிகளார் நடைமுறைப் படுத்தினார்.

"கோவிலில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் தரகர்கள்(அர்ச்சகர்கள்,பூசாரிகள்) எதற்கு?பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று,வழிபடும் உரிமையை வழங்கினால், இரட்டை வெற்றி கிடைக்கும் ", என்றார், அறிஞர் அண்ணா.

சிலர் கோவில் நகைகளுக்குப் பாதுகாவல் இல்லாமல் போய் விடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

"ஒரு தாய் தன் மகனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வது வருந்தத்தக்கது, வேதனையானது.

எல்லோரும் கருவறைக்குள் சென்று வழிபடும் போது, தெய்வத்திற்கு நகைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.எனவே யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் பெறுமாறு அரசியல் சட்டத்தைத் திருத்துவதை,நான் வரவேற்கிறேன்", என்று அடிகளார் பேசினார்.

31.05.74 இல் குன்றக்குடி ஆதீனத்தின் அய்ந்து கோயில்கள் சார்பில் திருப்பத்தூரில் பட்டிமன்றம் நடை பெற்றது.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். ஆம் ,இல்லை என்ற தலைப்புகளில் சொற்போர் நடந்தது.அடிகளார் அதன் நடுவராக இருந்தார்.

அடிகளாரின் அய்ம்பதாவது பிறந்த நாளின் போது, "பெரியார் இறந்த பிறகு வந்துள்ள எனது பிறந்த நாள் இது.சமயத்துறையில் நான் பெரியாரின் கொள்கையிலிருந்து மாறுபட்டாலும்,சாதி ஒழிப்பு,தீண்டாமை ஒழிப்பு ஆகிய கொள்கைகளில் எங்கள் இருவருக்கும் ஒற்றுமையுண்டு.

பெரியார் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை நான் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்துவேன்", என்று அடிகளார் பேசினார்.

ஒரு சமயம் அடிகளார் பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றபோது,அங்கு பணியாற்றிய பெண்கள், அவருக்கு மரியாதை தரும் நோக்கத்தில் தங்கள் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றினார்கள்.

உடனே அடிகளார் ,"செருப்பை அணிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் கால் புண்ணாகி விடும் என எச்சரித்தார்.தனக்கு மரியாதை தருவது பெரிதல்ல.கால்களை பாதுகாப்பது தான் முக்கியம்", என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


சுமார் 3000 மக்கள் வாழும் குன்றக்குடி கிராமம் வானம் பார்த்த பூமியாக,வறண்டு கிடந்தது.அங்கிருத்த நிலங்களில் கால் பகுதி கூட சரி வர விவசாயம் செய்யப்பட்டவில்லை.முக்கால் பங்கு நிலம் வீணே கிடந்தது.

அவ்வூர் மக்களில் பெரும் பான்மையோர் விவசாயக் கூலிகள்,வறுமைக் கோட்டின் கீழே மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவர்களை முன்னேறச் செய்வது எப்படி? என அடிகளார் சிந்தித்தார்.

அவர் 1976 அக்டோபர் 2 ஆம் தேதி(காந்தி ஜெயந்தி அன்று) அவ்வூர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசினார்.நாம் எல்லோரும் சேர்ந்து, நம் கிராம முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யலாம்.இந்த மண்ணில் கிடைக்கும் மூலப்பொருட்களையும்,விளைபொருட்களையும் பயன்படுத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கலாம் என அடிகளார் தெரிவித்தார்.

முதலில் குன்றக்குடி கிராம மக்களைப் பற்றிய தகவல்கள் புள்ளி விவரக் கணக்குகள் தயாரிக்கப் பட்டன.ஒவ்வொரு குடும்பத்தினரின் எண்ணிக்கை,வயது வந்த ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,அவர்களின் கல்வித் தகுதி, தொழில்,தகுதி, ஆர்வம்,வீடு,ஆடுமாடுகள்,நிலம் போன்ற சொத்து வசதி,இதர வசதிகள்,கடன்நிலை போன்ற விவரங்கள் தொகுக்கப் பட்டன.

1977 காந்தி ஜெயந்தியன்று அதற்கான குன்றக்குடி திட்டக் குழு உருவானது.

பாலிதீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பனை ஓலை மற்றும் நார்களால் முறம், கூடை, விசிறி,பெட்டி,துடைப்பம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை செய்யும் குடிசைத் தொழில்,முந்திரிக் கொட்டையிலிருந்து பருப்பைப் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை,அந்த பருப்பு நீக்கப் பட்ட தோட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை,பட்டுப் பூச்சி வளர்த்து,பட்டு நூல் எடுக்கும் திட்டம்
என பல திட்டங்களாக விரிவடைந்தது.

1980 ஆம் வருடத்தில் குன்றக்குடியில் இருந்த ஒரே ஒரு கந்து வட்டிக்கடைக்காரரையும் அங்கிருந்து வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.வட்டிக் கடைக்காரர் வெளியேற மறுத்தார்.எனவே அவரிடம் இனிமேல் யாரும் கடன் வாங்கக் கூடாது என்ற திட்டம் இயற்றப் பட்டது.

எனவே கந்து வட்டிக்கடைக்காரர் தானாகவே அங்கிருந்து வெளியேறினார்.

1989 இல் தமிழக முதலைச்சராக கலைஞர் கருணாநிதி மீண்டும் பதவியேற்ற, பிறகு குன்றக்குடியிலும் மதுபானக்கடை திறக்கப் பட்டது.

அடிகளார் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த ஒற்றை மதுக் கடையையும் ஒழித்தார்.


1984 செப்டம்பர் 9 ஆம் தேதியிட்ட இந்து பத்திரிக்கையில் சமூக அடித்தள நிலையில் சில சாதனைகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.குன்றக்குடி கிராமத் திட்டக் குழுவின் சாதனைகள் அதில் விவரிக்கப் பட்டிருந்தன.

அப்போதைய இந்திய பிரதமர் இந்திரகாந்தி அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.அனைத்துக் கிராமங்களுக்கும் நான் விரும்பும் திட்டம் இதுவே என அடிகளாருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.

டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகத்திற்கும் பிரதமர் கடிதம் எழுதினார்.இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அத்துடன் இணைக்கப் பட்டிருந்தது.குன்றக்குடியை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற கிராமங்களிலும் இது போன்ற திட்டங்களைச் செயல் படுத்துமாறு பிரதமர் அதில் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து 1985 பிப்ரவரியில் திட்ட ஆலோசகர் கே.வி.சுந்தரம், ஒரு குழுவினருடன் குன்றக்குடிக்கு வருகை தந்தார். அந்த குழு அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து,குன்றக்குடி திட்டக் குழுவின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட, பிறகு சென்றது.

06-08-1982 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழ் அர்ச்சனை மாநாடு காரைக்குடி பழ. கருப்பையா அவர்களின் முயற்சியால் நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கு நம் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்த மாநாட்டில் தான் மீனாட்சியம்மன் கோவிலில் வடமொழியில் அர்ச்சனை நடத்தப் படும்.தமிழ் அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற விதி இருந்து வந்தது.

அந்த விதி மாற்றி அமைக்கப்பட்து.

இனி தமிழ் மொழியில் அர்ச்சனை நடை பெறும்.வட மொழி அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற புதிய விதி உருவானது.

1991 மே மாதத்தில் அடிகளார் அமெரிக்கா,இங்கிலாந்து,ஜப்பான் முதலிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை முறைகளை கண்டு வந்தார்.

1982 பிப்ரவரி,மார்ச் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் இந்து கிறிஸ்தவ மதக் கலவரம் தீயாய் எரிந்தது.

போலீஸ்,அரசாங்கம்,அரசியல் கட்சிகளாலும் கூட கலவரத்தை அடக்க முடியவில்லை.குன்றக் குடி அடிகளார் அமைதிப் பணிக்கு அங்கு விரைந்தார்.

கலவரப் பூமியில் ஒர் அமைதிப் புறாவாக, ஒர் அமைதிப் புயலாக!...


_ஆதிசிவம்,சென்னை.





ஹைக்கூ-"பொய்ப் பேசி...! "



ஹைக்கூ
பொய்ப் பேசி...!


தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கும்
தொழிற்சாலை இருந்த இடம் தோண்டப் பட்டது
கணினிக் கட்டிடம் எழுப்ப..


அரசியல் வாதிக்கு
மேடையில் தந்த வீரவாள் உண்மை பேசியது
ஊழல் மன்னன் நீ...!


மொபைல் பேசிக்கு
கவிதைத் தமிழ் பெயர் வைத்தது.
பொய்ப் பேசி...!


வீட்டுக்காரரிடம்
விலைவாசி உயர்வு பற்றி பேசுவதைத் தவிர்த்தேன்
வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார் என்று


_ஆதிசிவம்,சென்னை.





வணக்கம்! என் இனிய இணைய இளைய தமிழகமே...!
Blog Widget by LinkWithin

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

இந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....!

புதிய பூவிது...!

Grab the widget  Tech Dreams

இ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....

அதிகம் பார்வையிட்ட பதிவுகள்

நான் இங்க இருக்கேன்....!

http://adobeperson.com/wp-content/uploads/2008/10/photoshop-chatting-logo-website-graphics24.jpg

உடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...

பின்பற்றுபவர்கள்

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Clicky Web Analytics

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner




என்னைப் பற்றி


உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook
"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Recent Comments


இந்த வலைப்பதிவில் தேடு